ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

திராட்சை 
                                                                                            - வெ. செல்வராஜ், பொள்ளாச்சி  

              திராட்சை செடி மீதும் ஆசை வந்தது.  மாடியில் வளர்ப்போம் என்று    மே 2014ல் ஒரு செடியை  வாங்கி வந்து பெரிய பிளாஸ்டிக் தொட்டியில் வைத்தேன். ஆரம்பத்தில் நன்றாக வளர்ந்தது.  பிறகு இலைகள் எல்லாம் உதிர்ந்து வெறும் குச்சி மட்டுமே இருந்தது.  







               மறுபடியும் நன்றாக தழைத்தது.  ஜூன் 2015ல் பூ எடுத்தது.  மூன்று கொத்துகள் மட்டுமே காய்த்தன.






 







             தினந்தோறும் அதன் வளர்ச்சியை பார்த்துக் கொண்டு வந்தேன்.  ஒரு நாள் காலை பார்த்தபோது மூன்று கொத்துகளையும் காணவில்லை.  என்ன மாயம் என்று தெரியவில்லை.  எப்படி போனது என்று புரியவில்லை.  அடுத்த காயப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.


ஞாயிறு, 10 மே, 2015

எங்கள் வீட்டுத்தோட்டம் 2014

தோட்டத்தில் முன்புறம் வைத்த நான்கு பழ நாற்றுகளும் நன்கு வளர்ந்துள்ளன. அதேபோல் இடப்புறம் வைத்த நாட்டு ரக மாதுளையும்   மேற்குப்புறம் வைத்த கறிவேப்பிலை செடிகளும் விரைவில் வளர்ந்துவிட்டன.  பீர்க்கங்காய், புடலை கொடிகளில் ஓரளவு காய்கள் கிடைத்தன.  கொத்தவரங்காய்  ஒரு செடி மட்டுமே முளைத்து வளர்ந்தது,  நன்றாக காய்த்தது.  பீன்ஸ் கொடிகள் சிலவும் நன்றாக காய்த்தன. 

கொய்யா, ஆரஞ்சு, மாதுளை, சப்போட்டா மரங்கள் 


               



கொத்தவரங்காய் 

                            




புதினா 


பீன்ஸ் 

மாடித்தோட்டம் 

மாடியில் வெள்ளரி பயிரிட்டதும், தண்ணீர் ஊற்றி வைக்க பயன்படுத்தும் பெரிய சிமென்ட் தொட்டிகளில் மா, நெல்லி மற்றும் செண்பக நாற்றுக்களை வைத்தேன். அவையும்  அருமையாக வளர்ந்துள்ளன. செண்பக மரம்  விரைவில் பூக்க ஆரம்பித்துவிட்டது.

மா 

செண்பகம் 

நெல்லி 
ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் எலுமிச்சையும் இன்னொன்றில்  வாழையும் நன்றாக வளர்ந்துகொண்டிருக்கின்றன. திராட்சைக் கொடியும் உண்டு.

எலுமிச்சை 

வாழை 

ஆரம்பத்தில் சிறிய தொட்டிகளில் விதைத்த  பாகை, தட்டை போன்ற கொடிகள் மண் இறுகிய காரணத்தால் சரியாக வளராமல் போய்விட்டன. பிறகு மண்ணுடன் சிறிதளவு தேங்காய் நார்களை உதிர்த்து கலந்து வைத்தபோது நன்றாக வளர ஆரம்பித்தன.  என்  நண்பர் ஒருவர் மூலமாக தேங்காய் நார்த் துகள் தொழிற்சாலைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்து தேங்காய் நார்த் துகள் கட்டிகள் வாங்கி வந்து அவற்றை உதிர்த்து மண்ணுடன் கலந்து வைத்த போது மண் நன்றாக இளகி கிடைத்தது, செடிகளும் நன்கு வளர்ந்தன.  உரம் பெரும்பாலும் ஆட்டு எரு தான்.



            

முளை விட்டிருந்த உருளைக்கிழங்குகளை இரண்டு தொட்டிகளில்  நட்டு வைத்தேன். அதில் ஒரு தொட்டியில் இரண்டு கிழங்குகளும் மற்றதில் நான்கு கிழங்குகளும்  கிடைத்தன.  மறுபடியும் முயற்சிக்கவேண்டும்.


செடி அவரை 

 கொடி  அவரை 


பீன்ஸ் 




சுரைக்காய் 


மயில் மாணிக்கம் 
செடி அவரை,  கொடி அவரை, பீன்ஸ், தட்டை, தக்காளி, புதினா மற்றும் கீரைகள் நன்றாகவே வளர்ந்தன. சுரைக்காய் 2 செடிகளில் நான்கு காய்கள் மட்டுமே கிடைத்தன.

மொச்சை 
செடி அவரை என்று விதைத்ததில் கொடியாக வளர்ந்தது.  காய்த்த பின் தான் தெரிந்தது, அது மொச்சை என்று.  நன்றாக காய்த்தது.


பூச்சித்தொல்லை

பெரும்பாலும் காய்கறிச்செடிகளில்  உள்ள பிரச்னை, பூச்சித்தொல்லை. நன்கு
வளர்ந்து காய்த்துகொண்டிருக்கும் செடிகொடிகளை பூச்சிகள் சீக்கிரம்
சிதைத்துவிடும். வேப்பம்புண்ணாக்கை ஊறவைத்து வடிகட்டிய நீருடன் வேப்ப எண்ணெய்  3 மிலி (ஒரு லிட்டர் தண்ணீரில்) கலந்து தெளிக்கும்போது ஓரளவு கட்டுப்பட்டது.   சில  சமயங்களில் பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி ஆகியவற்றை அரைத்து ஊறவைத்து வடிகட்டி தெளித்தபோதும் ஓரளவு பூச்சிகள் குறைந்தன.  ஆனால் முழு பலனில்லை.  அசுவினி மற்றும் மாவுப்பூச்சிகளை கட்டுபடுத்துவது பெரும் சவாலாக இருந்தது.  Sakthi Triple Action என்ற இயற்கை பூச்சிகொல்லியை  Sathyam Bio என்ற நிறுவனத்தில் இருந்து வாங்கினேன். அதை வேப்ப  எண்ணெயுடன் கலந்து தெளித்தபோது  நல்ல பலன் கிடைத்தது,  பூச்சிகளை நன்றாக கட்டுபடுத்தியது.

(தொடரும்...)

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

எங்கள் வீட்டு ரோஜா

- வெ.செல்வராஜ், பொள்ளாச்சி


       மலர்கள் இல்லாமல் தோட்டம்  அழகு பெறாது.  அதிலும் ரோஜா இல்லாமல் தோட்டம் முழுமை பெறாது.  புதிய தோட்டம் தயாரானதும் முன்புறம் 3 ரோஜா செடிகளும் மேற்குப்புறம் 5 செடிகளும் வைத்தேன்.  அதனுடன் பழைய வீட்டில் இருந்து கொண்டு வந்த  ரோஜாச்செடி ஒன்றும் தொட்டியில்.  அதன் பின் மாடியில் தொட்டியில் மேலும்  8 செடிகள் வைத்தேன். முன்புறம் வைத்த 3 செடிகளின் இருபுறமும் மாதுளை மற்றும் ஜாதிமுல்லைச் செடிகள் வளர்ந்து விட்ட காரணத்தால் ரோஜாச் செடிகள் சரியாக வளராமல் அப்படியே நின்றுவிட்டன. அதில் ஒன்றை எடுத்து தொட்டியில் வைத்ததில் அது நன்றாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

     மொத்தம் இருந்த 17 செடிகளில் ஒரு செடி காய்ந்து விட்டது, 4 செடிகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. பனி மற்றும் நோயின்  காரணமாக சற்றே கருகிய செடிகளில் 6 செடிகள்  இப்பொழுது துளிர்க்க ஆரம்பித்துவிட்டன.  6 செடிகள் நன்றாக உள்ளன. இவற்றிற்கு உரமாக ஆட்டு எருவும் உடன் சிறிதளவு வேப்பம்புண்ணாக்கும் இடுகிறேன்.  அவ்வப்பொழுது மண்புழு உரமும் இட்டு வருகிறேன்.  ஆனால் சில செடிகளைத் தவிர மற்ற செடிகளின் வளர்ச்சி அவ்வளவு திருப்தியாக இல்லை.



                          




     

மேலே உள்ளது நிறம் மாறும் ரோஜா. சுமார் 6 வருடங்களாக தொட்டியில் இருந்து பூத்துக்கொண்டிருக்கிறது.


                                                                                                                



                                                       



                                                       





கீழே உள்ள செடியை பாருங்கள்.



                              

எவ்வளவு அழகான மலர்கள்.  இந்த செடி எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து பூத்துக்கொண்டிருக்கிறது.


மற்ற மலர்கள்

எங்கள் தோட்டத்தில் ரோஜாவைத் தவிர மேலும் சில மலர்களும் உண்டு.  செவ்வந்தி, மல்லிகை,  ஜாதிமுல்லை (பிச்சிப்பூ), செம்பருத்தி, செவ்வரளி,  தங்க அரளி,  மாடியில் தொட்டியில் செண்பகப்பூ மற்றும் சில அழகு மலர்களும் உண்டு.


                                                   








நன்றி