சனி, 21 மே, 2016

மாமரம்  2016

                                                                                             - வெ.செல்வராஜ்,  பொள்ளாச்சி 

         மாடியில் தொட்டியில் வைத்த மாமரம் மறுபடியும் டிசம்பரில் பூக்க ஆரம்பித்தது.  நிறைய பூக்கள் பூத்தன.  ஓரளவு பிஞ்சுகளும் பிடித்தன.  அதில் ஏழு காய்கள் மட்டும் பெரிதாகின.  










                 அதில் இரண்டை காய்களாக பறித்துவிட்டோம்.  மற்ற ஐந்து காய்களையும் மரத்திலேயே நன்கு பழுக்க விட்டு பறித்தோம். நல்ல சுவை,  அல்போன்சா என நினைக்கிறேன்.









            மரத்திற்கு பெரிதாக பராமரிப்பு தேவைப்படவில்லை.  அவ்வப்பொழுது சாண உரம், மண்புழு உரம் இடுவதுண்டு, மற்றும் பஞ்சகவ்யா தெளிப்பதுண்டு. இதுவரை பூச்சித் தொல்லை இல்லை.  அடுத்த முறை இன்னும் அதிகமாக காய்க்க வைக்க வேண்டும்.


சனி, 30 ஏப்ரல், 2016

திராட்சை 2016
                                                                                                 - வெ.செல்வராஜ், பொள்ளாச்சி 

           மாடியில் வைத்த திராட்சை செடியில் மறுபடியும் டிசம்பர் 2015 ல் பூ எடுக்க  ஆரம்பித்தன.  2 பெரிய கொத்துகளும் 5 சிறிய கொத்துகளும் காய்த்தன. பழங்கள் லேசான புளிப்புடன் மிக சுவையாக இருந்தன. பறிப்பதற்கு முன் ஓரளவு  பழங்கள் வவ்வாலுக்கு உணவாகிவிட்டன.























        இந்த கொடிக்கென்று இதுவரை எந்தவித தனிகவனமும் செலுத்தவில்லை.  கொஞ்சம் நல்லபடியாக கவனித்திருந்தால் காய்ப்பு நன்றாக இருந்திருக்கும்.  இப்பொழுதுதான் இது சம்பந்தமான விவரங்களை சேகரித்து வருகிறேன்.  

      இணையத்தில் தேடியபோது, ஒருவர் வீட்டைச் சுற்றி திராட்சையை நடவு செய்து அவற்றை மாடியில் பந்தல் போட்டு படரவிட்டு நல்ல மகசூல் எடுத்திருந்ததை பார்த்தேன்.  சிறப்பாக இருந்தது. முயற்சிக்க வேண்டும்.

சனி, 16 ஜனவரி, 2016

எங்கள் வீட்டுத்தோட்டம்  2015

      மாடியில் தொட்டியில் வைத்த துவரைச்செடிகளும் தட்டைச்செடிகளும் கீழே வைத்த துவரைச்செடிகளும் மிக நன்றாக வளர்ந்து நிறைய காய்கள் தந்தன.  பச்சை துவரைப்பருப்பு குழம்பு மிக ருசியாக இருக்கும்.

துவரை - மாடியில் 


துவரை - கீழே 


     மாடியில் பிளாஸ்டிக் சீட் விரித்து அதில் வைத்த புதினா செடிகள் தளதளவென்று வளர்ந்து தொடர்ந்து பயன் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.




          வெற்றிலைக் கொடிகள் வாசலில் தோரணமாக அழகு தருகின்றன.







           தொட்டியில் வைத்த மாமரத்தில் நன்றாக பூ எடுத்தது.  மிகச் சிறியதாக சில பிஞ்சுகளும் காய்த்தன.  ஆனால்  சில நாட்களில் எல்லாப்பூக்களும் பிஞ்சுகளும் உதிர்ந்துவிட்டன.  இனி அடுத்த வருடம் வரை காத்திருக்கவேண்டும்.



        பெரும்பாலும் விதைத்த வெள்ளரி விதைகள் எல்லாம் முளைத்து விடுகின்றன.  காய்களும் விரைவில் பெரிதாகிவிடுகின்றன. இதில் பறிக்கத் தவறிய ஒரு காய் (ஜுன் 2015ல்) நன்றாக முற்றிவிட்டதால் பழுக்கட்டும் என்று விட்டுவிட்டேன். அது பழுத்து வெடித்தபிறகு பறித்தேன். மாவு போல மிக மென்மையாக இருந்தது.  அதனுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து சாப்பிட்டபோது மிகமிக சுவையாக இருந்தது.







           அடுத்து செப்டம்பரில் மறுபடியும் வெள்ளரி விதைத்தேன். செடிகள் வேகமாக வளர்ந்து நன்றாக பூ எடுத்தன. ஆனால் மொத்தமாக 7 காய்கள் மட்டுமே கிடைத்தன.  அதில் இரண்டை பழுக்க விட்டுவிட்டேன்.

















            தொட்டியில் வைத்த குட்டை ரக வாழைமரத்தில் ஒரு குலை அறுவடை செயதாகிவிட்டது.  32 பழங்கள் தான் கிடைத்தன.  ஆனாலும்  மிக ருசியாக இருந்தன. 






        இது தவிர பச்சை கத்திரிக்காய், ஊதாக் கத்திரிக்காய், வெண்டை, அகத்திக்கீரை, தக்காளி, பாகற்காய், முருங்கை  போன்றவையும் இந்த வருட பயிர்கள்.

பச்சைக் கத்திரிக்காய் 






கருவேப்பிலை 







பொரியல் தட்டை 

அகத்திக்கீரை 





முருங்கை,  அகத்தி 


         டிசம்பர் மூன்றாம் வாரத்தில் மீண்டும் மாமரமும் திராட்சைக்கொடியும் பூ எடுக்க ஆரம்பித்துவிட்டன.  விளைச்சலை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.