ஞாயிறு, 7 அக்டோபர், 2012


எங்கள் வீட்டுத் தோட்டம் 

வெ.செல்வராஜ்,  பொள்ளாச்சி







எங்கள் வீட்டு அழகு ரோஜாக்கள்

   எங்கள் வீட்டுத்தோட்டம்  சிறிய தோட்டம் தான். ஆனால்  அதில் வளர்ந்திருக்கும் மரங்களையும் செடிகளையும் பாருங்கள். என்ன தான் வீடு பெரியதாக இருந்தாலும் ஆடம்பரமாக இருந்தாலும் பசுமையான செடிகள் இல்லாமல் அழகு இல்லை.  இல்லவே இல்லை என்று தான் சொல்வேன்.  செடிகள் மேல் உள்ள எனது ஆர்வம், எனது அம்மாவிடம் இருந்து வந்தது,  எனது 10 வயது மகன் சுபாஷையும் தொற்றிக் கொண்டுள்ளது. 



எமது சிறிய தோட்டம் 
    எங்கள் தோட்டத்தில் மாதுளை மரமும் கொய்யா மரமும் பின்னிக் கொண்டு வளர்ந்துள்ளன.  கொய்யா நாற்று நாங்கள் வைத்தது.  மாதுளை தானாகவே முளைத்தது.  இந்த வருட ஆரம்பத்தில்   மாதுளையும் கொய்யாவும் நிறைய காய்த்தன. பெரிய காய்களாகவும்  மிகுந்த சுவையுடனும் இருந்தன.  கடையில் இருந்து நிறைய பழங்கள் வாங்கி சாப்பிட்டாலும் நமது வீட்டில் விளைய வைத்து பறித்து உண்ணும் போது வரும் திருப்தி தனி தானே.  மரங்களும் செடிகளும் நன்றாக வளர்ந்து நிறைய காய்களுடன் பார்க்கும் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.


மாலை நேரப் பதிவு

     செடிகளுக்கு இயற்கை உரங்களையே இட்டு வருகிறேன்.  கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் இருந்து பஞ்சகவ்யா கரைசலை வாங்கி தெளித்து வந்தேன். மண் புழு உரத்தையும் வாங்கி வந்து போட்டு வந்தேன். தற்போது ஆட்டு தொழு உரத்தையும்  காய்கறி கழிவுகளை மக்க வைத்த உரத்தையும் வேப்பம்புண்ணாக்கு சேர்த்து இட்டு வருகிறேன்.

மாதுளையும் கொய்யாவும்



மாதுளை - இந்த வருட காய்ப்பு



இன்சுவை கனிகள்


திணை
திணையுடன் கீரைகள் 





     பறவைகளுக்காக வாங்கி வந்த சூரியகாந்தி விதைகளை எனது மகன் தொட்டியில் விதைத்ததில் அவை நன்கு வளர்ந்து பூத்தன.  திணையையும் விதைத்ததில் அவை நன்றாக வளர்ந்துள்ளன.

ரோஜாவும் புதினாவும்

சூரியகாந்தி

ஜாதிமுல்லை செடியும் மருதாணி மரமும்


கொய்யா நாற்றுகள்


மணத்தக்காளிக் கீரை




விருந்தாளி பச்சைக் கிளிகள்
     சில வருடங்களாக இரவு நேரங்களில் வௌவால்கள் வந்து கொய்யாப் பழத்தை ருசித்துக் கொண்டிருக்கின்றன.  இப்பொழுது சுமார் ஆறு மாதங்களாக கிளிகள் வந்து கொய்யாப்  பழங்களையும் மாதுளம் பழங்களையும் ருசித்துக் கொண்டிருக்கின்றன.
     எங்கள் வீட்டில் இருக்கும் கிணற்றில் இரண்டு சிட்டுக்குருவி கூடுகள் உள்ளன.  அதில் வசிக்கும் குருவிகள் காலை முதல் மாலை வரை பெரும்பாலும் இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும்.  அதோடு தினமும் காலை வேளையில் இரண்டு தேன் சிட்டுக்கள் இந்த மரங்களில் வந்து அமர்ந்து சப்தமிட்டுக் கொண்டிருக்கின்றன.


   


அழகுச் செடிகள் இரண்டு

     இதுவரை நிறைய மரங்களையும் செடிகளையும் வளர்த்துவிட்டோம்.  தென்னை, வாழை, வேப்பமரம், சீனிப்புளியங்காய், பப்பாளி, கருவேப்பிலை, அகத்தி, பலவகையான பூக்கள், கீரைகள், புடலங்காய், பாவற்காய், வெண்டை, வெள்ளரிக்காய், மரவள்ளிகிழங்கு, தக்காளி, கத்திரி, மிளகாய், உருளை, சேனை என நிறைய காய்கறிகள் வளர்த்து  விட்டோம் எங்கள் தோட்டத்தில்.  அவை இன்னும் தொடரும்.