எங்கள் வீட்டுத்தோட்டம் 2020
வெ செல்வராஜ், பொள்ளாச்சி
இந்த வருடம் திராட்சை விளைச்சல் நிறைவாக இருந்தது. பெரிய அளவில் இல்லையென்றாலும் கூட திருப்திகரமாக இருந்தது. வழக்கம் போல் சுவையான பழங்கள். இரண்டு கொடிகளில் ஒன்று காய்ந்துவிட்டது. ஒன்றில் மட்டுமே விளைச்சல் கிடைத்தது.
| முலாம்பழம் |
| முலாம்பழம் |
| பிரண்டை |
| பொன்னாங்கண்ணி கீரை |
| மல்லிகை செடி - குண்டு மல்லி |
மாமரம் இந்த வருடம் காய்க்கவேயில்லை. மரம் வைத்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. வேர் வளர்ச்சி அதிகமாகி விட்டபடியால் மரம் உள்ள தொட்டி முழுவதும் வெடிக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் நிழல் வலையை தொட்டி முழுவதும் சுற்றி கயிற்றால் கட்டி வைத்துள்ளேன். சுமார் ஒரு வருடம் ஆகப்போகிறது, தொட்டி ஒன்றும் ஆகவில்லை.
ஜூலை 2019ல் கோவை கொடிசியாவில் நடந்த விவசாயக் கண்காட்சியில் இந்த சிவப்பு கொய்யா நாற்றை வாங்கி வந்தேன். ஒரு வருடம் ஆவதற்கு முன்பே காய்க்க ஆரம்பித்துவிட்டது. ஆரம்பத்தில் பூக்களை உதிர்த்து விட்டால் மரம் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. காய்க்க விட்டுவிட்டேன். சுவையான பழங்கள்.
2013ல் மாடித்தோட்டம் ஆரம்பித்தபோது வெள்ளரி பயிரிட்டதில் கிடைத்த அளவு காய்கள் அதற்கு பிறகு கிடைக்கவில்லை. பெரும்பாலானவர்கள் வெள்ளரிப்பழம் சாப்பிட்டிருக்க மாட்டார்கள் என நினைக்கிறன். பழுத்து வெடித்த அல்லது வெடிக்கும் நிலையில் உள்ள பழத்துடன் சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். நன்கு பழுத்த பழம் டெல்லி ஆப்பிளை விட மென்மையாக, மாவு போன்று இருக்கும்.
| மாதுளை |
| ஆரஞ்சு |
நிலத்தில் ஆரஞ்சு மரம் வைத்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. இரண்டு வருடம் முன்பு ஒரு தடவை நான்கு காய்கள் காய்த்தன. அதற்கு பிறகு இந்த வருடம் மூன்று காய்கள் காய்த்தன. காய் பெரியதாகும் போது இரண்டு உதிர்ந்துவிட்டன. ஒன்று மட்டும் பழுத்தது. புளிப்பு இல்லாமல் சுவையாக இருந்தது.
| பீன்ஸ் |
| கொடி அவரை |
| செடி அவரை |
குருவிக்கூடு
மாடித்தோட்டத்திற்கு பலவிதமான பறவைகள் வருவதுண்டு. அதில் ஒன்று தேன்சிட்டு. கத்திரிச்செடி, சுண்டைகாய்ச்செடி அல்லது வெற்றிலை கொடியில் முட்டையிடுவதற்கு கூடு கட்டுவதுண்டு. இரண்டு வருடங்கள் முன்பு வெற்றிலை கொடியில் கூடு கட்டி மூன்று குஞ்சுகள் பொரித்தன.
இந்த ஆண்டு சுண்டைக்காய் செடியில் கூடு கட்டி மூன்று முட்டைகள் இட்டது. முட்டையில் இருந்து மூன்று குஞ்சுகளும் வெளிவந்த சில நாட்களிலேயே கூடு கட்டியிருந்த இலை பழுத்துவிட்டது. எந்த நேரமும் உதிர்ந்துவிட தயாராக இருந்தது. அதனால் இலை விழுந்துவிடாமல் இருக்க பச்சைநிற துணியில் தூளி போன்று கட்டி தொங்கவிட்டேன். அந்த இலையின் காம்பையும் செடியுடன் சேர்த்து கட்டி வைத்தேன். இலை செடியில் இருந்து உதிர்ந்தாலும் தொங்கிக்கொண்டு தான் இருந்தது. சில நாட்களில் குருவிகள் பறந்து சென்றுவிட்டன.
தொடரும் ......